சிறுமி மேரி மகிழ்வோடு துள்ளிக் குதித்து ஓடிவந்தாள், தனது தோழி மகிழினியைப் பார்க்க. . . அவளிடம், "இன்று காலை எங்கள் வீட்டுப்பசு கன்று ஈன்றுள்ளது, இனி நான் எங்கள் வீட்டுக் கன்றுக்குட்டியுடன் விளையாடுவேன்" என்றாள். அதைக்கேட்ட மகிழினி, "என்னையும் விளையாட்டில் சேர்த்துக் கொள்" என்றாள். அப்போது மேரியின் வீட்டு மாட்டுத் தொழுவத்தில் ஒரே கும்பல்......ஓடிச்சென்று பார்த்தனர் அவர்கள் கண்ட காட்சி கல்நெஞ்சையும் கசிந்துருகச் செய்வதாக இருந்தது...... கன்றை ஈன்ற பசு தனது கழிவினை வெளியே தள்ள முடியாமல் இறந்துபோயிருந்தது. பாதி வெளிவந்திருந்த கழிவில் நிறைய நெகிழிக் குப்பைகள் காணப்பட்டன. அந்நெகிழியால் தான்

இறப்பு ஏற்பட்டதாகக் கால்நடை மருத்துவர் கூறிக் கொண்டிருந்தார். வேதனையுடன் பள்ளிக்குச் சென்றனர் மேரியும் மகிழினியும். சோகமாக அமர்ந்திருந்த இருவரையும் அழைத்துக் காரணம் கேட்டார் வகுப்பு ஆசிரியர். பிறகு, "நெகிழிகளைப் பயன்படுத்துவதால் பல தீமைகள் ஏற்படுகின்றன. மட்காத இந்தக் குப்பைகளால் சாக்கடைகளில் நீர்தேங்கி துர்நாற்றம் வீசுவதோடு, ஈ மற்றும் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவுகிறது. நெகிழிக் குப்பைகளை எரிப்பதால்

ஓசோன் படலம் பாதிப்படைகிறது. இதனால் சூரியனின் புற ஊதாக் கதிர்கள் நேரடியாக நம்மைத் தாக்கு இதனால் தோல் நோய்கள் ஏற்படுகின்றன", என்று விளக்கினார். இதுபற்றிப் பேசிக்கொண்டிருப்பதை விட்டுவிட்டுச் செயலில் இறங்குவோம் என்றார். பள்ளியின் நலன் காக்கும் பள்ளி மேலாண்மைக் குழுவினைக் கூட்டி, நெகிழி பற்றிய தீமைகளை எடுத்துரைத்தார். பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள், ஊர்ப் பொதுமக்கள் ஆகியோரைக் கொண்டு நெகிழி விழிப்புணர்வு பேரணி நடத்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அனைவரும் விழிப்புணர்வு வாசகங்கள் எழுதப்பட்ட

பதாகைகளை ஏந்தி, வாசகங்களைக் கூறிக் கொண்டே கிராமத்தின் அனைத்துத் தெருக்களிலும் பேரணியாக வந்தனர். இம்மாதிரியான விழிப்புணர்வு வாசகங்கள் எழுதப்பட்ட துண்டுப் பிரசுரங்களைப் பொதுமக்களிடம் கொடுத்து நெகிழியின் தீமைகளை எடுத்துக் கூறினர். மேலும் பயன்படுத்தப்பட்ட காகிதங்களைக் கொண்டு பைகள் செய்து வைத்திருந்தனர் . அதனை அவ்வூரின் அனைத்துக் கடைகளிலும் கொடுத்து அந்தப் பைகளைப் பயன்படுத்தச் சொல்லி நெகிழியின் தீமைகளை எடுத்துக் கூறினர். உள்ளூர் மக்களிடம் இனி கடைகளில் பொருட்கள் வாங்கும்போது துணிப்பைகளைக் கொண்டு செல்ல அறிவுறுத்தினர். எறும்பு ஊரக் கல்லும் தேயும் என்ற ஆன்றோரின் வாக்கிற்கு ஏற்ப இச்சிறு பிள்ளைகளின் முயற்சியால் அந்த ஊர் நெகிழியற்ற ஊராக மாறி வருகிறது ...........